கனடா அரசு 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் புதிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
“பாதுகாப்பான சமூக ஊடகச் சட்டம்” என பெயரிடப்பட்ட இந்த வரைவுச் சட்டமூலத்தை கனடா கலாச்சார அமைச்சர் மார்க் மில்லர் நேற்று (10) சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம் சிறுவர்களை இணையதள ஆபத்துகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களில் இருந்து பாதுகாப்பதாகும்.
புதிய சட்டத்தின் கீழ் சமூக ஊடக நிறுவனங்கள் கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டியதாகும். அதேவேளை, சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு சில விலக்குகள் வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் “ChatGPT” போன்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சேவைகளுக்கும் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை கொண்டு வரும் என கூறப்படுகிறது. அதேபோல் வெறுப்பு பேச்சு, வன்முறை தூண்டுதல், அவதூறு உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்தவும் கடுமையான நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
சட்ட விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 10 மில்லியன் கனேடிய டொலர்கள் அல்லது நிறுவனத்தின் உலகளாவிய வருவாயின் 3% வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் அமலாக்கத்திற்காக “கனடா டிஜிட்டல் பாதுகாப்பு ஆணைக்குழு” என்ற சுயாதீன அமைப்பும் அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளும் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கனடாவின் இந்த புதிய சட்டமூலம் உலகளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக