இரத்தினபுரி மாவட்டம் பலங்கொடை பகுதியில் திருமணம் செய்வதாக கூறி யுவதியை ஏமாற்றி பணம் மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
27 வயதுடைய குறித்த நபர், தன்னை பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) உயர் அதிகாரியாக அறிமுகப்படுத்திக் கொண்டு, சமூக ஊடகங்களில் AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி புகைப்படங்களை பயன்படுத்தி பெண்களை ஏமாற்றியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவருடன் சமூக வலைதளங்கள் மூலம் காதல் உறவை ஏற்படுத்தி, பின்னர் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். இதை நம்பிய அந்த யுவதியிடமிருந்து அவர் ரூ.1,27,000 பணத்தை மோசடி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், யுவதியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று நம்பிக்கையை பெற்றதாகவும், ஒரு சந்தர்ப்பத்தில் அவரது வங்கி அட்டையை திருடி அதிலிருந்து பணத்தை எடுத்ததாகவும் பொலிஸ் விசாரணைகள் தெரிவிக்கின்றன.
பணம் எடுக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியைப் பார்த்து சந்தேகம் அடைந்த யுவதி, பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நபர் பொலிஸாரால் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே திருமணமானவர் என்றும், இதேபோன்று மேலும் பல பெண்களை ஏமாற்றியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தற்போது மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக