சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள கொடூரமான சம்பவம், நாட்டில் பொதுமக்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒரு பாரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒரு நாட்டிற்குள் குடிமக்களினதும் தொழில் வல்லுநர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எந்தவொரு அரசாங்கத்தினதும் முதன்மையான பொறுப்பாகும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், எந்தவொரு தொழில் வல்லுநரும் அழுத்தங்கள் அல்லது அச்சுறுத்தல்கள் இன்றி, சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் தமது தொழில்முறை சேவைகளை வழங்குவதற்கான அடிப்படை உரிமை கொண்டவர்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்புகளுக்குள்ளும் வைத்தியர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சுகாதாரப் பணியாளர்கள் பல்வேறு பாதுகாப்பு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும், குறிப்பாக பணியிடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் நிலவுவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, குடிமக்களின் பாதுகாப்பையும் தொழில்சார் சூழலில் தொழில் வல்லுநர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக வலுவான மற்றும் நம்பகமான தேசிய வேலைத்திட்டம் ஒன்று உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக