மூன்று நாட்கள் நீடித்த உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணத்தை நிறைவு செய்து, மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு இன்று (06) இலங்கையிலிருந்து தனது நாட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்த பயணம், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் நடைபெற்றது. கடந்த 3ஆம் தேதி மாலைதீவு ஜனாதிபதி தனது மனைவி மற்றும் உயர்மட்டக் குழுவுடன் இலங்கையை வந்தடைந்திருந்தார்.
இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
மேலும், இலங்கை–மாலைதீவு இடையிலான 60 ஆண்டு இராஜதந்திர உறவைக் குறிக்கும் வகையில், கொழும்பில் மரக்கன்று ஒன்றையும் ஜனாதிபதி முகமது முய்சு நட்டு வைத்தார்.
அத்துடன், மாலைதீவு–இலங்கை வணிக மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், இலங்கையில் வசிக்கும் மாலைதீவு சமூகத்தினரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த பயணம் இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக