இலங்கையின் நுண்நிதித்துறையிலும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் முக்கிய பங்காற்றி வரும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தை எந்தவொரு சூழ்நிலையிலும் விற்பனை செய்வதற்கோ அல்லது அதன் செயற்பாடுகளைப் பிரித்து பலவீனப்படுத்துவதற்கோ அரசாங்கம் எந்தவித திட்டமும் கொண்டிருக்கவில்லை என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தெரிவித்துள்ளார்.
அனைத்து இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் 29ஆவது தேசிய மாநாடு பத்தரமுல்ல சுஹுருபாய கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது உரையாற்றிய அமைச்சர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குறுகிய காலத்திலேயே சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள ஊழியர்கள் எதிர்கொண்ட நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
சமுர்த்தி ஊழியர்களின் ஓய்வூதிய பிரச்சினைகள், சம்பள மேலதிகக் கொடுப்பனவு தொடர்பான சிக்கல்கள், சம்பளக் குறியீட்டு பிரச்சினைகள் மற்றும் ஒழுக்காற்று விசாரணைகளுக்கு உட்பட்டுள்ள ஊழியர்களின் விவகாரங்கள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்களில் விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த அரசாங்கங்களின் காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் தலையீடுகள் இனிமேல் சமுர்த்தி சேவையில் இடம்பெறாது என்றும், சமுர்த்தி ஊழியர்கள் அரசியல் அழுத்தங்களின்றி சுதந்திரமாகவும் கௌரவத்துடனும் தங்களது கடமைகளை மேற்கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தை முடக்குவதோ அல்லது அதன் செயற்பாடுகளை குறைப்பதோ அரசின் நோக்கம் அல்ல என்றும், மாறாக அதனை மேலும் வலுப்படுத்தி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சமுர்த்தி ஊழியர்களின் பதவி உயர்வு நடைமுறைகளை இந்த ஆண்டுக்குள் முழுமையாக நிறைவு செய்யுமாறு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், உயர் அதிகாரிகள், அனைத்து இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக