குருணாகல் மாவட்டத்தின் பிங்கிரிய பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் ஒருவர் தனது மனைவியை கத்தியால் தாக்கிக் கொலை செய்ததுடன், பின்னர் தானும் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பெண் பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படிவெல பகுதியைச் சேர்ந்த பத்மா குமாரிஹாமி என்ற 65 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாக அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னர் விஷம் அருந்தி உயிரிழந்தவர் அவரது கணவரான 59 வயதுடைய ஹேமசிறி ரத்நாயக்க என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் அடிப்படையில், தம்பதியினருக்கு இடையே பல மாதங்களாக குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தங்களது மகள் திடீரென காணாமல் போன நிலையில், அவரது சிறு பிள்ளைகளை பராமரிக்கும் நோக்கில் உயிரிழந்த பெண் சில மாதங்களுக்கு முன்பு மகளின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
இதற்கிடையில், தனது மனைவி மகளின் வீட்டில் தங்காமல் மீண்டும் வீட்டிற்கு வர வேண்டும் என கணவர் பலமுறை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. எனினும், மனைவி அதற்கு சம்மதிக்காததால் இருவருக்கும் இடையிலான முரண்பாடு மேலும் தீவிரமடைந்துள்ளது.
இதையடுத்து ஆத்திரமடைந்த கணவர் பிங்கிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பின்னர் மறுநாள் மனைவியை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக மகளின் வீட்டிற்கு சென்ற அவர், மீண்டும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது தன்னுடன் எடுத்துச் சென்றிருந்த கத்தியால் மனைவியின் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியேறிய கணவர், லிந்தபிட்டிய பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு அருகில் சென்று விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பப் பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்ட இந்த இரட்டை உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக