நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வில் யாழ். மாவட்ட எம்.பி இராமநாதன் அர்ச்சுனா, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து தெரிவித்த கருத்துகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் உரையாற்றும்போது, கச்சத்தீவு மட்டுமல்லாது யாழ்ப்பாணத்தையும் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், யாழ்ப்பாணத்தை தமிழகத்துடன் இணைத்தால் தமிழ் மக்கள் நலமாக இருப்பார்கள் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், தமிழக அரசியலில் சமீபத்தில் வெற்றி பெற்றுள்ள விஜய்க்கு அவர் நாடாளுமன்றத்தில் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். விஜய் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் தலைவராக இருப்பதாகவும் அவர் புகழ்ந்துள்ளார்.
வடக்கு பகுதியில் குறிப்பாக தீவுப் பகுதிகளில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளன என்பதை சுட்டிக்காட்டிய அவர், நெடுந்தீவு போன்ற இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், கச்சத்தீவு தொடர்பாக முன்பு எழுந்த விவாதங்களை நினைவூட்டிய அவர், அந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை விமர்சித்தார். இதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு பகுதிகளின் நிர்வாகம் குறித்து அவர் கூறிய கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரவலான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக