கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்வைத்த கருத்துகளுக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடும் பதிலை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், கச்சத்தீவு இலங்கையின் ஒருங்கிணைந்த பகுதி என்பதால் அதனை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க முடியாது என்று உறுதியாக கூறினார். மேலும், இதனை தேர்தல் அரசியலாக மாற்ற வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
நாமல் ராஜபக்ச தனது கருத்தில், நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த விஜய், அரசியல் என்பது திரைப்படம் போல எளிதானது அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மக்கள் முன் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மிகவும் முக்கியமான பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கச்சத்தீவு குறித்து விஜய் முன்பு மேடைகளில் பல கருத்துகளை வெளியிட்டிருந்ததை சுட்டிக்காட்டிய நாமல், இது இலங்கையின் நிலப்பரப்பு விவகாரம் என்பதால் வெளிப்புற மாநில அரசுகளால் இதில் தாக்கம் செலுத்த முடியாது எனவும் கூறினார்.
அதே நேரத்தில், கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு விஜய் விரும்பினால், முறையான விசா அனுமதியுடன் ஒரு சுற்றுலாப் பயணியாக வந்து கலந்து கொள்ளலாம் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
இந்த கருத்துகள் தற்போது இலங்கை–இந்தியா அரசியல் விவாதங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக