முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச வெளிநாடு செல்ல அனுமதி கோரி முன்வைத்த கோரிக்கைக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம அறிவித்துள்ளார்.
இது தொடர்பான உத்தரவை மேல் நீதிமன்றத்திடம் பெற்றுக்கொள்ளுமாறு நீதவான் யோசித ராஜபக்சவுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், அடுத்த அறிவித்தல் வழங்கப்பட்டவுடன் யோசித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, யோசித ராஜபக்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, சர்வதேச வர்த்தக உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால், தற்போது அமலில் உள்ள வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
எனினும், யோசித ராஜபக்சவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கோரிக்கைக்கு நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், இந்த வழக்கில் நீதவான் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும், மேலதிக உத்தரவுகள் தொடர்பாக மேல் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக