தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான மிருணாளினி ரவி, தனது காதல் குறித்து சமூக வலைத்தளத்தில் முதன்முறையாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். அவர் தனது காதலருடன் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகின்றன.
டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் முதலில் ரசிகர்களிடம் பிரபலமான மிருணாளினி ரவி, பின்னர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அவர், தொடர்ந்து சாம்பியன், எனிமி, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா, ஜூங்கா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்த ரோமியோ திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சினிமாவில் பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் மிருணாளினி, தனது புகைப்படங்கள் மற்றும் வாழ்க்கை தொடர்பான தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தனது காதலரான மஹாவிஷ்ணுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மிருணாளினி ரவி தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், மஹாவிஷ்ணுவை தான் காதலித்து வருவதாகவும், இருவரும் சுமார் 7 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த நிலையில், அந்த நட்பு தற்போது காதலாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மிருணாளினியின் இந்த காதல் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
மிருணாளினி குறிப்பிட்டுள்ள மஹாவிஷ்ணு, பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் என குறிப்பிடப்படுகிறார். அவர் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்பாக செய்திகளில் இடம்பெற்றிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக