இலங்கைக்கான புதிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரேய குல்கர்னி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின்போது இலங்கை மற்றும் இந்தியா இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, எதிர்கால ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை விரிவுபடுத்துவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
கடந்த ஆண்டு இறுதியில் இலங்கையை பாதித்த 'டித்வா' சூறாவளி அனர்த்தத்தின் போது அயல் நாடாக இந்தியா வழங்கிய துரிதமான மனிதாபிமான உதவிக்காக, இலங்கை மக்களின் சார்பில் இந்திய அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
அத்துடன், கொவிட்-19 பெருந்தொற்று காலத்திலும், நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிய காலகட்டத்திலும் இந்தியா இலங்கைக்கு வழங்கிய முக்கிய ஆதரவையும் அவர் நினைவுகூர்ந்து பாராட்டினார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் அபிவிருத்தி, பொருளாதாரம், மக்கள் நலன் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்தும் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படுவதன் அவசியம் குறித்தும் இரு தரப்பினரும் இந்தச் சந்திப்பில் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக