திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் கித்துலூத்து, 147ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலையிலிருந்து ஹபரணை நோக்கி இந்திய தம்பதியினர் பயணித்த கார் ஒன்றும், ஹபரணையிலிருந்து கந்தளாய் நோக்கி அதிவேகமாக பயணித்த உயர் ரக ரேசிங் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மோதலின் தாக்கம் காரணமாக மோட்டார் சைக்கிள் பல துண்டுகளாகச் சிதறியதுடன், சில நொடிகளிலேயே தீப்பற்றி எரிந்து முற்றிலும் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற 27 வயதுடைய இளைஞர், உடனடியாக கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக தீவிர சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, காரில் பயணித்த இளைஞரின் மனைவி லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர், அவர் தங்கியிருந்த விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்திற்கான முதன்மை காரணம், வாகனங்களின் வேகம் மற்றும் விபத்து தொடர்பான ஏனைய காரணிகள் குறித்து கல்லோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக