யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கியமான வரலாற்று மற்றும் கலாசாரப் பாரம்பரியச் சின்னங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள பழைய கச்சேரி கட்டடத்தை பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்தக் கட்டடம் யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய வரலாற்று சொத்துகளில் ஒன்றாக இருப்பதாக குறிப்பிட்டார்.
பழைய கச்சேரி கட்டடத்தை விரைவாகப் பாதுகாப்பதுடன், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதன் வரலாற்று மற்றும் கட்டடக்கலை முக்கியத்துவத்தைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனுடன், யாழ்ப்பாணக் கோட்டை, மந்திரிமனை மற்றும் சங்கிலியன் தோரண வாயில் அமைந்துள்ள வளாகம் உள்ளிட்ட முக்கிய வரலாற்று இடங்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் வரலாறு, கட்டடக்கலை மற்றும் கலாசார மரபுடன் நெருங்கிய தொடர்புடைய இந்த இடங்கள், எதிர்கால தலைமுறைகளுக்கும் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான பாரம்பரியச் சொத்துகளாகக் கருதப்படுகின்றன.
இதற்காக நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக