யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற வெசாக் கூடு தொடர்பான சர்ச்சை நாட்டின் பல பகுதிகளிலும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இதனை இனவாத பிரச்சினையாக மாற்ற சில குறுகிய குழுக்கள் முயற்சித்து வருவதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் சசிந்து பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட வெசாக் கூடு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களின் ஒற்றுமையின் அடையாளமாக உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார். இன, மத வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து மாணவர்களும் ஒன்றிணைந்து செயற்பட்டதன் விளைவாகவே இந்த முயற்சி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், மாணவர்களிடையே காணப்படும் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் சீர்குலைக்க விரும்பும் சில குறுகிய சிந்தனையுடைய குழுக்களே இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தி இனவாத உணர்வுகளை தூண்ட முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். இது எந்த ஒரு இனத்தினரின் அல்லது மாணவர் சமூகத்தின் ஒட்டுமொத்த நிலைப்பாடாக கருதப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இவ்வாறான அரசியல் மற்றும் இனவாத நோக்கங்களுடன் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களுக்கு மாணவர்களோ பொதுமக்களோ பலியாகக் கூடாது எனக் கேட்டுக்கொண்ட அவர், அனைவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்களின் நலன் தொடர்பான சில முக்கிய முன்னேற்றங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 'மஹாபொல' புலமைப்பரிசிலுடன் மேலதிகமாக 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தார். இது மாணவர் அமைப்புகளின் நீண்டகால கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுவதாகவும் கூறினார்.
அத்துடன், பல்கலைக்கழக விடுதிப் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் 55 புதிய விடுதிகளை அமைக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக 13 விடுதிகளின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன, மத அடிப்படையிலான பிரிவினைகளை உருவாக்கி அரசியல் இலாபம் தேட முயலும் தரப்புகளுக்கு எதிராக மாணவர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதையும், நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு என்பதையும் சசிந்து பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக