ஈக்யூடி (EQT) குரூப் நிறுவனம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வாங்குவதற்காக சுமார் 2 முதல் 2.1 பில்லியன் டாலர் (சுமார் ₹18,520 கோடி) மதிப்பிலான ஏலத்தைச் சமர்ப்பிக்கத் தயாராகி வருகிறது. இது இதற்கு முன் ஆவ்ரம் கிளேசரின் 'லான்சர் கேபிடல்' (Lancer Capital) முன்வைத்த 1.8 பில்லியன் டாலர் ஏலத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்சிபி அணியின் தற்போதைய உரிமையாளரான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (டியாஜியோ நிறுவனத்தின் இந்தியப் பிரிவு), தங்களது மதுபானம் சாராத இதர முதலீடுகளை மறுபரிசீலனை செய்யும் நோக்கில், நவம்பர் 2025-ல் இந்த அணியை விற்பனை செய்யப்போவதாக அறிவித்தது.
இந்த விற்பனை செயல்முறைக்கான இறுதி ஏலத்தைச் சமர்ப்பிக்க மார்ச் 16, 2026 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆதார் பூனவல்லா (சீரம் இன்ஸ்டிடியூட்), ரஞ்சன் பாய் (மணிப்பால் குழுமம்), ஈக்யூடி குரூப், லான்சர் கேபிடல் உள்ளிட்ட சுமார் 9 முதல் 10 முன்னணி முதலீட்டாளர்கள் ஏலத்தின் அடுத்த கட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விற்பனை மற்றும் உரிமையாளர் மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் மார்ச் 31, 2026-க்குள் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனாக உள்ள ஆர்சிபி, இந்த மெகா விற்பனையின் மூலம் உலக அளவில் மிகவும் மதிப்புமிக்க விளையாட்டு நிறுவனங்களில் ஒன்றாக மாற உள்ளது. ஆடவர் ஐபிஎல் அணி மட்டுமின்றி, மகளிர் பிரீமியர் லீக் (WPL) அணியும் இந்த விற்பனையில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக