தொற்றுநோய்ப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் துஷானி தம்பேரரா தெரிவித்ததன்படி, இலங்கையில் வருடாந்தம் சுமார் 13,000 பேர் எலிக்காய்ச்சல் (Leptospirosis) தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த ஆண்டு மட்டும் 11,585 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு, 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 1,800 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். குறிப்பாக இரத்தினபுரி, காலி, கேகாலை, மொனராகலை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அதிகளவான பாதிப்பு பதிவாகியுள்ளது.
எச்சரிக்கை:
லெப்டோஸ்பைரா என்னும் பாக்டீரியாவால் இந்த நோய் ஏற்படுகிறது. தொற்றுக்குள்ளான எலிகள் மற்றும் பாலூட்டி விலங்குகளின் சிறுநீர் மூலமாக பாக்டீரியா பரவுகிறது. பாக்டீரியா பரவியுள்ள நீர்நிலைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் வயல் நிலங்களில் நடமாடுவது அல்லது வேலை செய்வதன் மூலம் மனிதர்களுக்கு நோய் பரவுகிறது.
பிரச்சனை காரணம்:
நகர்ப்புறங்களில், குறிப்பாக கொழும்பு, கண்டி போன்ற இடங்களில் முறையற்ற விதத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் எலிகளின் பெருக்கம் அதிகரித்து, எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ளது.
அவதானம்:
பொதுவாக 20–60 வயதுக்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்பட்டாலும், அண்மைக்காலமாக சிறுவர்களும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
விவசாயிகள், சிறுபோக நெற்செய்கை மற்றும் பெரும்போக அறுவடைப் பணிகளில் ஈடுபட்டிருக்கும்போது வயல் நிலங்கள் மற்றும் கால்வாய்களில் இறங்கும் போது உரிய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் எனவும் மருத்துவ நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக