மத்திய கிழக்கு நெருக்கடியால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அச்சுறுத்தல்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று கொழும்பில் அவசர சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாஸ, கடந்த வாரம் காலி கடற்பரப்பிற்கு அருகாமையில் ஈரானியப் போர்க்கப்பல் அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, உலக அரசியல் மோதல்கள் இலங்கைக்கு மிக நெருக்கமாக வந்துவிட்டதாக எச்சரித்தார். தற்போது நாட்டில் ஒரு மாதத்திற்கு மட்டுமே எரிபொருள் கையிருப்பு உள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் ஏற்படக்கூடிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கச் சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், மத்திய கிழக்கில் வாழும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், கடல் போர் அபாயக் காப்புறுதி கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள தேயிலை மற்றும் ஆடைத் தொழில்துறையினருக்கு விசேட மானியங்களை வழங்க அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். சர்வதேச விலை உயர்வைச் சாட்டாக வைத்து மக்கள் மீது மேலதிக வரிச் சுமைகளை ஏற்ற வேண்டாம் என எச்சரித்த அவர், இந்தியப் பெருங்கடல் பிராந்திய சங்கத்தின் தலைமைப் பதவியைப் பயன்படுத்தி கடல்வழிப் பாதைகள் இராணுவமயமாக்கப்படுவதைத் தடுக்க இலங்கை இராஜதந்திர ரீதியில் முன்னிற்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக