நாட்டில் தனிநபர் ஒருவரின் கையில் அதிகாரம் குவிந்திருப்பது சட்டத்தின் ஆட்சிக்கும் ஜனநாயகத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும் என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
எனவே, 1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றத்தின் 75ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு நடைபெற்ற “வித்தக விழா” நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் வல்லரசு நாடுகள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அக்கிரமங்களில் ஈடுபட்டு வருகின்றன என அவர் தெரிவித்தார். இதனால் சர்வதேச ரீதியில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இத்தகைய சர்வதேச மோதல்களால் இலங்கை போன்ற சிறிய நாடுகளே பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நாட்டிற்கு வரும் ஆண்டுகளில் பில்லியன் கணக்கிலான கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய சவாலான நிலை இருப்பதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய ஆட்சியாளர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என்ற வாக்குறுதியுடனேயே ஆட்சிக்கு வந்தனர் என நினைவூட்டிய அவர், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கையில் இருக்கும் நிலையில் அந்த மாற்றத்தை மேற்கொள்வார்களா என்பது சந்தேகமே எனக் குறிப்பிட்டார்.
மேலும், தமக்குக் கிடைத்துள்ள எல்லையற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் சாசனத்தில் எதேச்சதிகார மாற்றங்களைச் செய்ய முயற்சிகள் நடைபெறுகின்றன எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். சர்வாதிகாரப் போக்கு இலங்கையில் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசியல் சாசனத்தில் மாற்றங்கள் செய்யப்படும் தருணங்களிலும், ஜனநாயக விழுமியங்கள் மீறப்படும் சூழல்களிலும் அதற்கு எதிராக சட்ட மாணவர்களும் சட்டத்தரணிகளும் முன்னிலையில் இருந்து குரல் கொடுக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
கொழும்பில் அண்மையில் சட்டத்தரணி ஒருவர் கொல்லப்பட்டபோது சட்ட சமூகத்தினர் காட்டிய அதே ஒற்றுமையும் தீவிரமும் அரசியல் சாசனப் பாதுகாப்பிலும் வெளிப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்களுக்கு அரசியல் மற்றும் சட்ட விவகாரங்களில் தெளிவூட்டுவது சட்ட சமூகத்தின் தார்மீகப் பொறுப்பாகும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக